Friday, July 2, 2010

கவிதை

தூரத்தில் விழும்
சன்னமான
இசைகேட்டு
லயிக்கிறேன் நான்...

விழித்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
சூனியத்தில் உறங்கிய
என் காலம்!
- யாழி.
செல் பேசி- 9976350636

Monday, June 7, 2010

அய்க்கூ

காற்று வலுக்க வலுக்க
மேலும் சப்தமாய்
மழைப்பாட்டு
- கோ.பாரதிமோகன்

•••••••••••••••••••••••••••••••••
திடீரென பெய்த மழை
சூட்டைக் கிளப்பியது
அவளின் நினைவு
- குடந்தை அன்புமணி

Thursday, February 11, 2010

காதலர் தின சிறப்பு கவிதைகள்

சாளரத்தின் வழியே

உட்புகுகிறது
மழையின் ஈரம்
உள்ளிருக்கும் வெப்பம்
வெளியேற வாய்ப்பற்று
என்னில் குவிகிறது
சூடாகிக் கொண்டிருக்கிறேன்
நான்...

**************************

என் பார்வையை
கிரகித்துக் கொண்டே
நீ
விட்டுப் போகிறாய்
சிறு புன்னகையை
என்
மகரந்தங்களில்
சூழ் பிடிக்கத் தொடங்கிவிட்டது
நம் காதல்

- யாழி,
செல் : 9976350636


Sunday, January 3, 2010

ஒரு கவிதை, ஒரு அய்க்கூ...


ஒரு கவிதை
விலைவாசி உயர்வு
அகவிலை கேட்டு
போராடும் அலுவலர்கள்
அமைதியாய் நகரும்
பிச்சைக்காரன்
••••••••••••
அய்க்கூ
மரங்களற்ற சாலை
நிழல் தருகிறது
புதிய பாலங்கள்
••••••••••••
குடந்தை அன்புமணி.

Tuesday, September 8, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



அலுவலகம் போகும் பெண்
நகம் வளர்க்கிறாள்
கூட்டமாகவே பேருந்து
- நாணற்காடன் (செ.பே - 9942714307)

போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை
- ராமலிங்கம் (செ.பே.எண்- 9842277982)


நீ என்பது தனிமை
நான் என்பது முன்னிலை
நாம் என்பது படர்க்கை!
- ஞானசேகரன் (செ.பே.எண்- 9842579597)

Tuesday, August 25, 2009

அய்க்கூ கவிதைகள்

கிழிந்த புடவை
மறைத்து கட்டும் அம்மா
பாவம் தாவணிப்பெண்.

•••••••••••••••••

வேலிகள் தாண்டி
மேயப் பார்க்கின்றன
விழிகள்.

••••••••••••••••••

வரதட்சணை கொடுத்த அப்பா
மகிழ்ச்சியில் திளைத்தார்
கையில் பேத்தி
••••••••••••••
படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். இலக்கியா, தகவல் மலர் வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

Thursday, August 13, 2009

சுதந்திரக் கனவுகள்...



ஒரு
ஆகஸ்ட் 15-ல்
வெள்ளை இருட்டுகள்
வெளியேறிய பின்

இருநூறு ஆண்டுகளாய்
அடிமைப்புழுதியில்
அழுந்திக் கிடந்த
எங்கள் சுயச்சூரியனை
தூசு தட்டி
ஜனநாயக சட்டை
அணிவித்தோம்

என்னாயிற்று?

ஆயிரமாயிரம்
முன்னோர்களின்
குருதியில் பூத்த
சுதந்திரச் சோலைக்குள்
இன்று
கொரில்லாக்கள் அல்லவா
குடிபுகுந்தன

அரசியல் சிற்பிகளிடம்
செதுக்கச் சொல்லித்தானே
உளி கொடுத்தோம்
சிம்மாசனத்தில் அமர்ந்து
பாரதத்தை
சிதைக்கச் சொன்னது யார்?

இடியாய் விழும்
அரசியல் அடியில்
வலி பொறுக்காத தேசம்
பாஞ்சாலியாய் கதறுகையில்
கை கொடுப்பதாய் வந்த
கண்ணபிரான்களோ
துச்சாதனனுக்கு அல்லவா
துணைபோயினர்?

எல்லோரும் பசியாறத்தான்
சமைக்கப்பட்டது
ஆனால்
சுதந்திரச் சோறு
பரிமாறப்படுவதோ
பணக்காரர்களின் பந்தியில் மட்டுமே

சிதறும் சில
பருக்கைகளும்
சில்லரைக்கே விநியோகம்

பசிக்காய் அழுது... அழுது...
பசி மறந்த பிறகுதான்
இங்கே
கூழ்காய்ச்சவே
திட்டமிடுகிறார்கள்

அழுத குழந்தைகளுக்காய்
ஆப்பம் வாங்கப் போனவர்களின்
ஏப்பச் சத்தத்தில்
எங்கள்
காது பிளக்கிறது

ஆனாலும் இவர்கள்
நன்றி மறக்காதவர்கள்
அதனால்தான்
ஆண்டுகள் ஐந்திற்கு
ஒருமுறையேனும்
எங்கள் வாசலுக்கு
வணக்கம் போட வருகிறார்கள்.

நாங்கள்கூட
புத்திசாலிகள்தாம்

ஆனாலும்
வாக்குறுதி விளக்கில்
விட்டில்களாய் அல்லவா
விழுந்துவிடுகிறோம்.

என்ன செய்வது?

கடிக்கும் என்று தெரிந்தும்
நாய்கள் வளர்ப்பது
எங்கள் நாகரீகமாயிற்றே

- கோ. பாரதிமோகன்.