Friday, August 13, 2010

கவிதை'கள்'

பூக்களின் காதில்
ரகசியம் சொல்லி
வெகுமதியாய்
தேன்துளி வாங்கும்
வண்ணத்துப்பூச்சி!
- மித்ரா

**********************
என் கவிதைகளில்
காதலை விதைக்கத் துணிவின்றி
மொத்த விதைகளையும்
சேமித்துக் கொண்டிருக்கிறேன்
மௌன குகைக்குள்...
சுற்றங்களின் சந்தேகம்
என் மேல்  முளைத்துவிடும் என்ற அச்சத்தில்!
- ரம்யா

*********************
தேவதைகளை சந்திக்கவே
அவரவர் தவமிருக்கையில்
எனக்கு மட்டும் அதை
பரிசாக கொடுத்தது
காதல்!
- முத்து ஆனந்த்

*******************

பெற்றவர் காப்பகத்தில்
காக்கைக்கு
கைப்பிடிச் சோறு
- தம்பி

இது நான் ரசித்த கவிதைகள். உங்கள் பார்வைக்காக....

Monday, August 2, 2010

காத்திருத்தலின் வலி!

எல்லா கதவுகளையும்
மூடியபோது
நீ வந்தாய்...

சாளரங்களையாவது
திறக்கும்படி மன்றாடினாய்...

நான்
புகைக்கூண்டுகளையும்
அடைத்துவிட்டு வந்தேன்...

காத்திருப்பு காலங்கள்
வலி மிகுந்தது தோழி...

அப்போது,
சூரிய வெப்பங்கள்...
நெருப்பு சாட்டைகளால்
விளாசிப்போகும்...
மௌன உதடுகள்
விரிசல் கோட்டை
வேகமாக கிழிக்கும்...

தேவையா தோழி
அந்த காத்திருப்பு?

அதனால்தான் இந்த கதவடைப்பு
காரியங்கள்...

மெல்ல கதவிடுக்கின் வழியே
நோக்கினேன்...

வெளியேறிக் கொண்டிருந்தாய்...
இப்போது
நட்சத்திரங்கள் முறைத்தன.

அது உன் கண்களைப் போல தெரிந்தது!

- சூரியநிலா (9789507810)