Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Friday, February 13, 2009

காதலர் தினம் கொண்டாடப்போகிறீர்களா?


காதலர் தினம் கொண்டாடுவது ஒன்றும் பெரிதில்லை. எத்தனை காதலர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள்.அப்படியும் இணைந்த காதலர்கள் எத்தனைபேர் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
எனக்குத் தெரிந்த ஒருவர் காதலிக்கும் போது அந்த காதலிக்காக உருகு உருகென்று உருகினார். அந்தப் பெண்ணை ஒருநாள் பார்க்காவிட்டாலும் சாப்பிட மாட்டார். ஆனால், பெற்றோரை சம்மதிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, பதிவு திருணம் செய்துகொள்ளவும் தைரியமில்லை. அந்தப்பெண்ணை மறந்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுவிட்டார். அந்தப் பெண்ணும் வேறொரு ஆடவணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.(அந்தப் பெண் அவருக்காக நிறைய நாட்கள் காத்திருந்தாள் என்பது உண்மை.)
அடுத்து மற்றொரு நண்பர். இவரும்கூட அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தார். அந்தப் பெண்ணையே இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். அப்புறம் என்ன என்கிறீர்களா? அவர்கள் வாழ்க்கையின் போக்குதான் சரியில்லை.(இத்தனைக்கும் அந்த நண்பருக்கு வருமானத்திற்கு குறைவில்லை.) இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வது, அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, இருவரும், பிறந்த வீட்டுக்கு(தனிகுடித்தனம் இருக்கிறார்கள்) அடிக்கடி செல்வது இப்படியே போகிறது அவர்கள் வாழ்க்கை. இவர்கள் காதலித்தது குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள். இந்த ஐந்து வருடங்களில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதுதான் என்ன?
எங்கள் குடும்பத்தில் பெரும்பாலோர் காதல் திருமணங்கள்தான் செய்திருக்கிறோம்.(நான் உட்பட) எங்களுக்குள் சிற்சில சண்டைகள் வரும். அதுவெல்லாம் சில மணித்துளிகள்தான் நீடிக்கும். பிறகு சமாதானமாகிவிடுவோம். பின்பு அந்த சண்டையையே வைத்து கிண்டல்கூட பண்ணிக்கொள்வோம். காதலித்தோ, பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ எதுவானாலும் ஒருவரையொருவர் புரிந்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை.காதல் திருமணம் செய்வோர் எல்லோரும் காலமெல்லாம் காதலுடன் வாழ்க.