திருமங்கலம் இடைத்தேர்தல் வந்தாலும் வந்தது,அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகிவிட்டன. மக்களுக்கும் திரும்பிய இடமெங்கும் பலத்த வரவேற்பு. திருமங்கலத்தில் நடப்பவற்றை பார்த்தால், வாக்காளர்கள் கொடுத்துவைத்தவர்களா... அல்லது பாவப்பட்டவர்களா என்பதே புரியவில்லை. தி.மு.க.மீது அ.தி.மு.கவும், அ.தி.மு.க.மீது தி.மு.க.வும் மாறி மாறி பழியைச் சொல்கிறார்கள். மற்ற கட்சிகளும் ஒழுங்கா என்று கேட்காதீர்கள். மக்களாகிய உங்களுக்குத் தெரியாததா! இடைத் தேர்தலை சீக்கிரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஏதோ அரசியல் சதி என்றளவுக்கு தி.மு.க. முதலில் அறிக்கை விட்டது. ஜெயலிதாவோ தேர்தலில் தோற்றுப்போவோம் என்ற பயத்தில் கருணாநிதி உளறுகிறார் என்றார். அதன்பிறகு தேர்தலை தடுக்க எதிர்கட்சிகள் என்ன தொந்தரவுகள் கொடுத்தாலும் தி.மு.க.வினர் கையைகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அளவிற்கு கருணாநிதி பேசினார்.இப்போது தி.மு.க., அ.தி.மு.க. இருவரும் பணத்தை வாரி இறைப்பதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். அந்தந்த கட்சிக்கு சார்பாக அவர்களின் சொந்த மீடியாவும் உழைக்கின்றன. இந்த நிலையில் பா.ம.க. யாருக்கும் அதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது. (ஜெயிக்கும் கட்சியுடன் நாடாளுமன்றக் கூட்டணி வருமோ!)தே.மு.தி.கவும் களத்தில் போராடி வருகிறது. கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்கும் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது.தி.மு.க.கூட்டணியில் இதுவரை இருந்த இரு கம்யூனிஸ்ட்டுகளும் அ.தி.மு.க.விற்காக வாக்கு சேகரித்து வருகின்றன.முதன்முறையாக அழகிரியும், மு.க.ஸ்டாலினும் இணைந்தும் தேர்தலை சந்திக்கின்றனர். மீண்டும் தயாநித மாறன் தி.மு.க. கூடாரத்திற்குள் நுழைந்திருக்கிறார். பொங்கல் பரிசாக திருமங்கல மக்கள் தரும் வாக்கை வெல்லப்போவது யார்? பொறுத்திருங்கள்...
கனவும் துணிவும்
2 days ago




