Showing posts with label அஞ்சலி கூட்டம். Show all posts
Showing posts with label அஞ்சலி கூட்டம். Show all posts

Sunday, February 8, 2009

பதினைந்து நாளில் ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு- ஈழத்தமிழரர் அகிலனின் ஏக்கம்.


பதிவர்கள் சார்பாக ஈழத்தமிழருக்காக தன்னுயிர் ஈந்த முத்துக்குமரனுக்கு அஞ்சலிக்கூட்டம் தி்ட்டமிட்டபடி சென்னை தியாகராயர் நகர், நடேசன் பூங்காவில் நடைபெற்றது. சரியான நேரத்திற்கே கூட்டம் ஆரம்பித்ததே இந்த நிகழ்வின்போதுதான் என்றபோதே நமது வலைப்பதிவர்களின் உணர்வினை புரிந்துகொள்ள முடிந்தது.
பதிவர்களின் அறிமுகத்திற்கு பிறகு ஒருவர் பேசினார்.(அனைவரின் பெயரை தவிர்க்கிறேன்.) ஈழத்தமிழருக்கான தமிழ் மக்களின் உணர்வுகளையும், பத்திரிகையாளர் சிலரின் போக்கையும் விலக்கிவிட்டு, இதற்காக நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் காங்கிரஸை புறக்கணிப்பதே, அதற்கு மாற்றாக பி.ஜே.பி. ஆதரிக்க வேண்டும் என்றார்.

அவர் கருத்துக்கு அனைவருமே பி.ஜே.பி.யால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றபோது, நமது எதிர்ப்பை காட்டத்தான் அவ்வாறு செய்யச் சொன்னேன் என்றார். மற்றபடி அனைவரும் ஒரே மாதிரிதான் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்தே மேலாங்கியது.
வைகோ சிறப்பாக செயல்படுவதாக ஒருவர் குறிப்பிட்டபோது, அவரின் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காரணம், அ.தி.மு.க. கூட்டணியில் அவர் இருப்பதே. அவர் அக்கூட்டணியை விட்டு விலகி, ராமதாஸ், திருமா, தா.பாண்டியன் போன்றோர் கூட்டணி வைத்தால் நல்லது என்ற கருத்தும் பரவலாக இருந்ததை அறிய முடிந்தது.

அடுத்து பேசியவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அகிலன். அவர் ஈழ நிலையை விளக்கிய போது அவையில் கனத்த மெளனம் நிலவியது. முஸ்லிம்கள் நாளைக்கு ஐந்து தடவை தொழுகை செய்கிறார்களோ இல்லையோ, நான் ஐந்து முறை இன்டர் நெட்டுக்குச் சென்று, ஈழத்தில் வாழும் எனது அம்மா, தம்பி, தங்கைகளின் பெயர் பலியானோர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றவர், முத்துக்குமரன் போன்றோர் தீக்குளிப்பது தமிழர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இரு்ககலாம். ஆனால் அதனால் ஆவப்போவது என்ன என்று கேள்வி எழுப்பினார். ராஜபக்சேவின் முடிவில் அவர் தீவிரமாகவே இருப்பதாகவும், இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் நிலையிலதான் இப்போது ஈழம் இருக்கிறது. அதற்குள் ஏதும் அதிசயம் நடந்தால்தான் உண்டு என்றபோது, அனைவரும் பேசத்திரணியற்று இருந்தனர்.

இந்திராகாந்தி,ராஜீவ் காந்தி போன்றோருக்கு செருப்பு மாலை போடப்பட்டது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, இதுவரை அவர்களை நாம் அனைவரும் மதித்தே வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய காங்கிரஸின் போக்கின்மீது உள்ள வெறுப்பின் வெளிபாடாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தவிர, அந்த தலைவர்களை அவமதிப்பதை நாமும் கண்டிக்கிறோம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

தொடரும் தீக்குளிப்பையும் கண்டிக்கப்பட்டது.ஈழத்தமிழருக்கா நம்மால் என்ன செய்ய முடியும் என்று விவாதிக்கப்பட்டது. பேரணி, ஆர்பாட்டம், துண்டறிக்கை வெளியிடுவது என்றெல்லாம் அலோசனைகளுக்குப் பின் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருக்கமே நிலவியது.
வந்திருந்த வாசகர் ஒருவர், இலங்கைப் பிரச்சனையில் இன்னும் பலருக்கு தெளிவில்லாமலே இருப்பதாக தெரிவித்தார். உழைக்கப் போன இடத்தில் தனிநாடு கேட்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருப்பதாக தெரிவித்தவர், அதைப்பற்றி பதிவு எழுதுங்கள், முத்துக்குமரனின் இறுதி அறிக்கையை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் என்றார். அப்போது ஒருவர்(பெங்களூர் பதிவர்) வருகிற ஞாயிறு(15.2.2009) அன்று பெங்களூரில் ஆர்பாட்டமும், துண்டறிக்கைகள் வெளியிடுவதும் செய்யப்போவதாகவும், துண்டறிக்கைகள் கன்னடம்,ஆங்கிலத்திலே இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது.(தமிழில் இருந்தால் கன்னடர்கள் இந்த விசயத்தில் வேறு விதமாக எண்ணக்கூடும் என்பதால்) என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மற்ற மொழி தெரிந்தவர்களும் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மொழிமக்களிடமும் இவ்விசயத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக ஈழத்திற்காக தீக்குளித்த தமிழர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு கனத்த இதயங்களுடன் கலைய மனமில்லாமல் ஆங்காங்கே நின்று மீண்டும் மீண்டும் பலரும் பேசிக்கொண்டிருந்தனர்.