Thursday, August 13, 2009

சுதந்திரக் கனவுகள்...



ஒரு
ஆகஸ்ட் 15-ல்
வெள்ளை இருட்டுகள்
வெளியேறிய பின்

இருநூறு ஆண்டுகளாய்
அடிமைப்புழுதியில்
அழுந்திக் கிடந்த
எங்கள் சுயச்சூரியனை
தூசு தட்டி
ஜனநாயக சட்டை
அணிவித்தோம்

என்னாயிற்று?

ஆயிரமாயிரம்
முன்னோர்களின்
குருதியில் பூத்த
சுதந்திரச் சோலைக்குள்
இன்று
கொரில்லாக்கள் அல்லவா
குடிபுகுந்தன

அரசியல் சிற்பிகளிடம்
செதுக்கச் சொல்லித்தானே
உளி கொடுத்தோம்
சிம்மாசனத்தில் அமர்ந்து
பாரதத்தை
சிதைக்கச் சொன்னது யார்?

இடியாய் விழும்
அரசியல் அடியில்
வலி பொறுக்காத தேசம்
பாஞ்சாலியாய் கதறுகையில்
கை கொடுப்பதாய் வந்த
கண்ணபிரான்களோ
துச்சாதனனுக்கு அல்லவா
துணைபோயினர்?

எல்லோரும் பசியாறத்தான்
சமைக்கப்பட்டது
ஆனால்
சுதந்திரச் சோறு
பரிமாறப்படுவதோ
பணக்காரர்களின் பந்தியில் மட்டுமே

சிதறும் சில
பருக்கைகளும்
சில்லரைக்கே விநியோகம்

பசிக்காய் அழுது... அழுது...
பசி மறந்த பிறகுதான்
இங்கே
கூழ்காய்ச்சவே
திட்டமிடுகிறார்கள்

அழுத குழந்தைகளுக்காய்
ஆப்பம் வாங்கப் போனவர்களின்
ஏப்பச் சத்தத்தில்
எங்கள்
காது பிளக்கிறது

ஆனாலும் இவர்கள்
நன்றி மறக்காதவர்கள்
அதனால்தான்
ஆண்டுகள் ஐந்திற்கு
ஒருமுறையேனும்
எங்கள் வாசலுக்கு
வணக்கம் போட வருகிறார்கள்.

நாங்கள்கூட
புத்திசாலிகள்தாம்

ஆனாலும்
வாக்குறுதி விளக்கில்
விட்டில்களாய் அல்லவா
விழுந்துவிடுகிறோம்.

என்ன செய்வது?

கடிக்கும் என்று தெரிந்தும்
நாய்கள் வளர்ப்பது
எங்கள் நாகரீகமாயிற்றே

- கோ. பாரதிமோகன்.

Thursday, August 6, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



பசியைப் போக்கியது
குருணைக் கஞ்சி
பாவம் கோழிகள்

- பவுல்ராஜ், புதுகை
தொ. பே எண் : 9994703318

அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

- ராசி. கண்மணி ராசா.
செ. பே. எண்: 9245317602

ஜன்னல் வழியே
கைநீட்டும் குழந்தைகள்
வெளியே மழை

- நாணற்காடன், ராசிபுரம்.
செ. பே. எண்: 9942714307

கோயில் மணியோசை
பரவசத்தில் மக்கள்
கலவரமாய் புறாக்கள்

- கன்னிக்கோயில் ராஜா, சென்னை.
செ. பே. எண்: 9841236965

நன்றி : அய்க்கூ கவிதைகள் 'கன்னிக்கோவில் ராஜா' அவர்களின் எஸ்.எம்.எஸ். அய்க்கூ இதழிலிருந்து...

Friday, July 31, 2009

ஈரோடு பதிவர்களே...

ஈரோடு பதிவர்களே...

ஜுலை 31, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 11 இரவு 9.30 வரை மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.


ஜுலை 31, வெள்ளிக்கிழமை மாலை தொடங்கும் விழாவில் ஸ்டாலின் குணசேகரன், மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் கலந்து கொள்கிறார்கள்.


ஆகஸ்ட் 1, சனிக்கிழமை...

பேராசிரியர் ஞானசம்பந்தன் 'கற்பனவும் இனி அமையும்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் சுமதி 'நேய அருள் மெய் அன்றோ?' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்குகிறார்கள்.

ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை...

த. உதயசந்திரன் 'உலகை மாற்றிய புத்தகங்கள்' என்ற தலைப்பிலும், கவிஞர்- பாடலாசிரியர் அறிவுமதி 'பச்சைத் தமிழ்' என்ற தலைப்பிலும் சிறப்புரை.


ஆகஸ்ட் 3, திங்கட்கிழமை...

பேராசிரியர் பெரியார்தாசன் 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் த. இராமலிங்கம் 'நிற்க அதற்குத் தக' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 4, செவ்வாய்கிழமை...

பேராசிரியர் அப்துல் காதர் 'பழைய கடல் புதிய அலை' என்ற தலைப்பிலும், கவிஞர் பா. விஜய் 'புத்தகமும் சினிமாவும்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 5, புதன்கிழமை...


பேராசிரியர் த. இராஜராம் அவர்கள் 'நல்லதோர் வீணை' என்ற தலைப்பிலும், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் 'கற்றுக் கொடுக்கும் கதைகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை...


பழ. கருப்பையா அவர்கள் 'யோசிக்கும் வேளையில்' என்ற தலைப்பிலும், பத்திரிகையாளர் சுதாங்கன் 'மேவும் விரல் யார் உனக்கு?' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை...

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் 'எய்த விரும்பியதை எய்தலாம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 8, சனிக்கிழமை...

மத்திய இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் 'தேடிவரும் தென்றல்' என்ற தலைப்பிலும், பர்வின் சுல்தானா 'உதவாதினி ஒரு தாமதம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 9, ஞாயிற்றுகிழமை...

டாக்டர் சுதா சேஷய்யன் 'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பிலும், அருட் தந்தை ஜெகத் கஸ்பர் 'மண்ணில் கால்பதித்து வானில் கைவீசி' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 10, திங்கட்கிழமை...

பேராசிரியர் ம. இராசேந்திரன் 'அகர முதல...' என்ற தலைப்பிலும், கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'எதுபோல என்று சொல்லலாம்?' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 11, செவ்வாய்கிழமை... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நிறைவுப் பேருரையுடன் விழா நிறைவு பெறுகிறது.


பதிவர்கள் கலந்துகொண்டு அனுபவங்களை இடுகையிட வேண்டுகிறேன்.

Monday, July 27, 2009

நிலாப் பெண்ணே... (தினமலர்- வாரமலரில் எனது கவிதை)



•பெண்ணே உன்னை
நிலவாக
மலராக
கதிரின் ஒளியாக
கற்பனை செய்ய
என் மனம் ஏற்கவில்லை.

•காரணம் என்னவென்று
கண்மணியே புரிகிறதா...

•நிலவும் ஒருநாள்
தேய்ந்துவிடும்

•மலரும் மணத்தை
இழந்துவிடும்

•கதிரின் ஒளியும்
மங்கிவிடும்

•ஆகவேதான்
பெண்ண உன்னை...

• பி.கு: இது தினமலர்- வாரமலரில்...ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்றில் வந்த கவிதை. ஹி... ஹி...

Thursday, July 9, 2009

காதலின் வலிமை



எத்தனையோ
பொய்கள் சொல்லியிருக்கிறேன்
உன்னிடத்தில்...

பொய்யென்றே தெரிந்தும்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய்
அனைத்தையும்!

'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.

காதலின் வலிமையை
காலங்கள் உணர்த்துமென
காத்திருந்தேன்.

ஜாதியின் வலிமையை
உணர்த்தியது
உன் திருமணம்!


(இந்த கவிதை காதலில் தோல்வியுற்ற என் நண்பனுக்காக...)

Monday, June 29, 2009

அய்க்கூ கவிதைகள் (29.6.2009)



குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடும்ப ரகசியம்

*************

தூசு பறக்காமல்
தரையை பெருக்குகிறது
மரத்தின் நிழல்

**************

தனித்த இரவுகளில்
பூத்துக் கிடக்கின்றன
கண்கள்

இங்கும் என்னை காணலாம்...!

Tuesday, June 23, 2009

அய்க்கூ கவிதைகள் (24.6.2009)

அந்திபொழுது
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்

*************

கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்

*************

மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்

உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!